மணிப்பூர் வீடியோ விவகாரம்  தொடர்பாக ஆகஸ்டு 10ம் தேதி பிரதமர் மோடி  பதிலளிக்க உள்ளதாக தகவகல்கள் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் மற்றும் மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில்  நாடாளுமன்ற  கூட்டத்தொடர்  தொடங்குவதற்கு முன்பாக  மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்களை நூற்றுக்கணக்கான ஆண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச்செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில் இதுவரை எந்த ஒரு முக்கியமான அறிவிப்பு குறித்த விவாதம் நடத்த இயலாமல் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து 8-வது நாளாக நேற்றும் முடங்கியது.

இதற்கிடையே மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் 10 நாள்களில் பட்டியலிடப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில் இது குறித்த விதாதம் ஆகஸ்டு 8ம் தேதி நடைபெறும் எனவும், ஆகஸ்டு 10ம் தேதி பிரதமர் பதில் அளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.