மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை தோற்கடித்து கடந்த 2011-ல் மம்தா, முதன் முதலாக ஆட்சியை பிடித்தார். இதற்கு அவரது சிங்குர் நில மீட்பு போராட்டமும் முக்கிய காரணமாக அமைந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு சிங்குர் நில மறு பயன்பாட்டு சட்டத்தை அவர் கொண்டு வந்தார். இதனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேற நேரிட்டது.

இந்நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையில் சிங்குர் நில மசோதா நிறைவேறியதன் 10-ம் ஆண்டு தினத்தை மம்தா நேற்று நினைவுகூர்ந்தார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “நமது விவசாய சகோதரர்கள் மத்திய அரசின் அலட்சியத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். நமது சமூகத்தின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளின் நலனுக்காக நாம் ஒன்றிணைந்து போராடுவோம். அவர்களின் உரிமைகளை நிலை நிறுத்துவது நமது முதன்மை முன்னுரிமையாக இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு தொடக் கத்தில் இருந்தே மம்தா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.