சேலம் : மேச்சேரி அடுத்த வெள்ளார் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (30). லாரி டிரைவரான இவருக்கு, நந்தினி(22) என்பவருடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியான நந்தினி அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்கு சென்று வந்துள்ளார். நந்தினிக்கு நேற்று முன்தினம் மாலை, பிரசவ வலி அதிகமானதையடுத்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வீட்டிற்கு சென்ற ஊழியர்கள் நந்தினியை சிகிச்சைக்காக தொப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, பிரசவ வலி அதிகமானதால் ஒட்டப்பட்டி என்ற இடத்தில் வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு, ஊழியர்கள் நந்தினிக்கு பிரசவம் பார்த்தனர்.

இந்த பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தாயும், சேயும் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உரிய நேரத்தில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் கோபிநாத் மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு மண்டல மேலாளர் குமரன், மாவட்ட மேலாளர் வினோத், அம்பிகேசன், மனோஜ் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.