தமிழகத்தில் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்புள்ளது என அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞருமான பி.சஞ்சய் காந்தி தெரிவித்தார்.

இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியது: “இந்திய பொருட்களுக்கான புவிசார் குறியீடு சட்டம் 2003 ம் ஆண்டில் நடைமுறைபடுத்தப்பட்டு தற்போது 20 ஆண்டுகள் நிறைவு செய்கிறது. தமிழகத்தில் இதுவரை 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில், 10 பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவை. இந்நிலையில் மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கற்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால்புரம் பிரம்பு வேலைப்பாடுகள், மார்த்தாண்டம் தேன், மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் வெவ்வேறு காலகட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்டன. இவற்றில் ஊட்டி வர்க்கி தவிர மற்ற 10 பொருட்களும் எனது மூலமாக விண்ணப்பம் செய்யப்பட்டது.

இந்த 11 பொருட்களுக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அரசிதழில் 2022, நவம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. புவிசார் குறியீடுக்காக அரசிதழில் வெளியிடப்பட்ட 4 மாதங்களுக்குள் பொதுமக்கள் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படாவிட்டால், அப்பொருள்கள் புவிசார் குறியீடு பதிவு பெறுவதற்கு உறுதி செய்யப்படும். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பிக்கப்பட்ட 11 பொருட்கள் குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டதில் இருந்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கான 4 மாத கால அவகாசம் மார்ச் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. எனவே, 11 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம், புவிசார் குறியீடு பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெறக்கூடிய நிலை ஏற்படும்.

இவற்றில் மணப்பாறை முறுக்கு தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மணப்பாறையில் கிடைக்கும் தண்ணீர் இதன் சுவைக்கு காரணம். ஆத்தூர் வெற்றிலை குறித்து கி.பி. 1295 ஆம் ஆண்டு மார்கோ போலோ எழுதிய பயணக் குறிப்பில் இடம்பெற்றுள்ளது. மண், காற்று வளம், ஈரப்பதம், தாமிரபரணி தண்ணீர் ஆகியவையே ஆத்தூர் வெற்றிலையின் தனிச் சிறப்புக்குக் காரணம்.

கம்பம் பன்னீர் திராட்சை 19 ஆம் நூற்றாண்டிலிருந்து தேனி மாவட்டம் கம்பம், போடிநாயக்கனூர், சின்னமனூர், உத்தமபாளையம் வட்டங்களில் விளைவிக்கப்படுகிறது. இந்த ஊரில் கிடைக்கிற மண் வளம், காற்று, ஈரப்பதம் ஆகியவையே இந்த திராட்சைக்கு மகத்துவம் ஊட்டுகிறது. நகமம் காட்டன் சேலை 1871 ஆம் ஆண்டிலிருந்து பொள்ளாச்சி, சாலூர், கிணத்துக்கடவு, ஆணைமலை, உடுமலைப்பேட்டை ஆகிய ஊர்களில் தயாரிக்கப்படுகின்றன.

மயிலாடி கற்சிற்பம் 100 ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வருகிறது. தைக்கால்புரம் பிரம்பு வேலைப்பாடுகள் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் 20 ஆம் நூற்றாண்டிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மார்த்தாண்டம் தேன் 1924 ஆம் ஆண்டுக்கு முன்பாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மண் வளம், காற்று, ஈரப்பதம் ஆகியவை இதன் மகத்துவத்துக்கு காரணம். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கிடைக்கும் கரிசல் மண், செம்மண்ணில் தயாரிக்கப்படும் மானாமதுரை மண்பாண்டம் நீண்ட காலம் உழைக்ககூடியது” என்றார்.