திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் குறித்து வரும் ஏப்ரல் 3-ம் தேதி ஏஎஸ்பி பல்வீர் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் பொறுப்பு வகித்து வந்தார். அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறைக்கு இவர் பொறுப்பேற்றபின், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. 10-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை அளித்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, பற்களை பிடுங்கி தண்டனை அளிக்கும் ஏஎஸ்பி, கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன்மகாதேவி சார் ஆட்சியர், முகமது சபீர் ஆலத்துக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே, ஏஎஸ்பி பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டிருந்தது.

நாளிதழில் இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. புகார் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை பிரிவு ஐஜி ஆறு வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணைய தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட செல்லப்பா, இசக்கி முத்து, சுபாஷ், வேத நாராயணன் உள்ளிட்ட 5 பேர் வழக்கறிஞர் மகாராஜன் தலைமையில் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய தலைவர் முன் வெள்ளிக்கிழமை ஆஜராகினர். இவர்களிடம் எஸ்பி, மகேஸ்வரன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு ஆஜரான 5 பேரிடம், பல் உடைப்பு சம்பவம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஏஎஸ்பி பல்வீர் சிங் வரும் ஏப்ரல் 3ம் தேதி மாநில மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.