முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக, 254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை நிறுவ தெற்கு ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் பெறும் வசதி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கரோனா பாதிப்பின்போது, இந்த சேவை முடங்கியது. தற்போது ஒரு சில ரயில் நிலையங்களில் மட்டுமே தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் உள்ளது.

பல ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் எடுக்கும் இயந்திரங்கள் இல்லாததால், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், 254 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் எடுக்கும் இயந்திரங்களை நிறுவ தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதன்படி சென்னை கோட்டத்தில் 96, திருச்சி கோட்டத்தில் 12, மதுரை கோட்டத்தில் 46, சேலம் கோட்டத்தில் 12, திருவனந்தபுரம் கோட்டத்தில் 50, பாலக்காடு கோட்டத்தில் 38 என்று மொத்தம் 254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளது.

தற்போது 99 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் எடுக்கும் இயந்திரங்கள் உள்ளது. இதன்படி சென்னை கோட்டத்தில் 34, திருச்சி கோட்டத்தில் 7, மதுரை கோட்டத்தில் 16, சேலம் கோட்டத்தில் 13, திருவனந்தபுரம் கோட்டத்தில் 14, பாலக்காடு கோட்டத்தில் 15 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் உள்ளது.