வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் எனும் நிலையில், டிசம்பர் 19-ம் தேதி வரை மொத்தம் 3,83,27,994 ஐடிஆர் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய ஆண்டு தோறும் ஜூலை 31 ஆம் தேதி தான் கடைசி நாளாக இருக்கும். ஆனால் புதிய வருமான வரித் தளத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும், கரோனா தொற்றுப் பாதிப்பு காரணமாகவும் செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 என இரண்டு முறை வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாள் நீட்டிக்கப்பட்டது.

வருமான வரி டிசம்பர் 31 நெருங்கி வரும் நிலையில், நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதுகுறித்து வருமான வரித்துறை தெரிவித்துள்ளதாவது: 2021-22 மதிப்பீட்டு வருடத்திற்கு டிஆர் தாக்கல் 3.03 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், ஐடிஆர்1 -58.98% , ஐடிஆர்2-8%, ஐடிஆர்3-8.7%, ஐடிஆர்4-23.12%.

நவம்பரில், 48% ஐடிஆர்கள் சரிபார்க்கப்பட்டு, 82.80 லட்சம் கணக்குகளுக்கு ரிபண்ட் தொகை அனுப்பப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர், தாமதமின்றி ரீபண்ட் பெற, தங்கள் வங்கி கணக்குடன் நிரந்தர கணக்கு எண்ணை இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் தாமதமின்றி கணக்குகளை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டு, வரி செலுத்துவோரின் மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள் மூலமாக வருமான வரித்துறை தகவல்களை பகிர்ந்து வருகிறது.

இதுவரை தங்கள் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யாதவர்கள், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் வகையில், உடனடியாக அவற்றைத்தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

டிசம்பர் 19-ம் தேதி வரை மொத்தம் 3,83,27,994 ஐடிஆர்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் 4,80,074 ஐடிஆர் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தெரிவித்துள்ளது.