தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகரும், ரேஸருமான அஜித் குமார் முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் சினிமாவில் நடிப்பதுடன் தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அவரது ரேஸிங் குழு சில பந்தயங்களில் முதல் 3 இடங்களைப் பிடித்து சாதித்துள்ளது. பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்த ஆண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டது.

அஜித் குமாரின் ரேஸிங் அனுபவம் ஆவணத் திரைப்படமாக இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கிளாடியேட்டர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு மற்றும் முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து அஜித் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் முன்னெடுப்பிற்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு, தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.
குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் ஒருவராக, விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் புகழ்பெற்ற வார்த்தைகளை சற்றே மாற்றி இவ்வாறு கூற விரும்புகிறேன்:
“One small step by the Tamil Nadu Government, one giant leap for Indian motorsports (தமிழக அரசின் ஒரு சிறிய அடி, இந்திய மோட்டார் பந்தயத்துறைக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்)”. முதலமைச்சர் விஜய் அவர்களின் அனைத்து முயற்சிகளும் பெரும் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அனைத்து விளையாட்டு முன்னெடுப்புகளும் மாபெரும் வெற்றி பெறட்டும். நன்றியும் வாழ்த்துகளும், அஜித் குமார்” எனத் தெரிவித்துள்ளார்.