அறிஞர் அண்ணா பால் உற்பத்தியாளர்கள் நலநிதித் திட்டத்தின்கீழ் ரூ.1,04,25,833 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஆக. 21) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் விற்பனை செய்ய முதற்கட்டமாக 6 மொத்த விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வணிக ஒப்பந்த ஆணைகளை வழங்கினார்.

ஆவின் நிறுவனம் கிராம அளவில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், மாவட்ட அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்குக் கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.

ஆவின் நிறுவனம் 4.36 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 26.68 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்குத் தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமானது பால் மற்றும் பால் பொருட்களை முகவர்கள் மூலமாகச் சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் கத்தார் போன்ற மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

முதல்வர் தலைமையில் 19.7.2021 அன்று நடைபெற்ற கால்நடை, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வுக் கூட்டத்தின் நடவடிக்கைக்கு இணங்க, பால் மற்றும் பால் உபபொருட்களை நுகர்வோர்களுக்கு ஏற்ற வகையில் தயாரித்து, அதனை ஆந்திரா மற்றும் தெலங்கானா போன்ற வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யவும், ஐக்கிய அரபு நாடுகள் (United Arab Emirates) – துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மன், ஓமன்(மஸ்கட்), கத்தார், கனடா, அமெரிக்கா (கலிபோர்னியா) போன்ற நாடுகளில் ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலமாக வருடத்துக்குச் சுமார் 60 கோடி ரூபாய் அளவில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சுமார் 6 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவின் விற்பனையை உலகமெங்கும் விரிவுபடுத்தும் நோக்கில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முதற்கட்டமாக 6 மொத்த விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கருணை அடிப்படையில் பணி நியமனம்

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் (ஆவின்) பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 47 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளையும், துணைப்பதிவாளர் (பால்பதம்) அலுவலகத்தில் பணிபுரிந்த காலத்தில் உயிரிழந்த ஒரு பணியாளரின் மனைவிக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கான பணிநியமன ஆணையினையும் வழங்கிடும் அடையாளமாக 10 வாரிசுதாரர்களுக்கு முதல்வர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

பேரறிஞர் அண்ணா பால் உற்பத்தியாளர்கள் நலநிதித் திட்டத்தின்கீழ் விபத்தினால் உயிரிழந்த பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 2.50 இலட்சம், கல்வி உதவித்தொகை ரூ.25,000, திருமண உதவித்தொகை ரூ.30,000, விபத்தினால் உயிரிழந்த பால் உற்பத்தியாளர்களின் ஈமச்சடங்குக்கு ரூ. 5,000 என, 44 பயனாளிகளுக்கு ரூ.1,04,25,833 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குவதன் அடையாளமாக, 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.