தகுதியானவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.5 பவுன் வரையிலான கூட்டுறவு நகைகடன், தகுதியானவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக பகுப்பாய்புகள் நடத்தப்பட்டதாகவும், அதன்படி 51 தரவுகள் சேகரிக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் தகுதியானர்களுக்கு 5 சவரன் வரை கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2021 ல் திமுக தேர்தல் அறிக்கையின் படி கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுன் உட்பட்ட நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கடந்த ஆட்சியில் நடைபெற்ற பயிர்க்கடனில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அவ்வாறான தவறுகள் நகைக்கடன் தள்ளுபடியிலும் நடைபெற்றிருப்பதாக அமைச்சர் கூறினார். விசாரணைகள் நடத்தி முடிக்கப்பட்டு தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அனைத்து நகைக்கடன் பெயர், கூட்டுறவு சங்க விவரம், கணக்கு எண், ஆதார் எண் உள்ளிட்ட 51 வகையாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. உரிய ஏழைகள் மட்டுமே கடன் தள்ளுபடிக்கான பயனை பெற வேண்டும் என அரசு கருதுகிறது. 2021ம் ஆண்டு பயிர் கடன் வழங்கியதில் பயன் பெற்றவர்கள் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள். முறைகேட்டில் ஈடுபட்ட சங்கங்கள் மீது உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்.

கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேவையான உதவியை அரசு செய்யும், கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன் தகுதியானவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும். இதனால், அரசுக்கு 6000 கோடி கூடுதல் செலவாகும் என்று முதலமைச்சர் கூறினார்.