மதுரை: மனைவியின் மிரட்டல் காரணமாக கணவனுக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கம்பத்தைச் சேர்ந்த நாராயணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனக்குத் திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், எனது மனைவியின் நண்பரும், அவரது தந்தையும் மார்ச்மாதம் என்னை வீடு புகுந்து தாக்கினர். இது பற்றி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தற்போது என் மனைவியும், அவரது நண்பரும் எனது சொத்துக்களையும், கடைகளையும் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுஉள்ளனர். இதற்காக என்னை கொலை செய்ய திட்டம் தீட்டிஉள்ளனர். எனவே எனக்கு போலீஸ் பாதுகாப்பு தர எஸ்பிக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதை நீதிபதி தண்டபாணி விசாரித்தார். பின்னர், மனுதாரர் மனுவின் அடிப்படையில் அவருக்குப் பாதுகாப்பு வழங்குவது குறித்து மாவட்ட எஸ்பி பரிசீலிக்க வேண்டும். மனுதாரர், எதிர் தரப்பு ஆகியோரை விசாரித்து 4 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.