அரசுப் பணிகளில் எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தினருக்கான பதவி உயர்வை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது. இது மத்திய, மாநில அரசுகளின் கொள்கை முடிவு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பணி பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி, ஜர்னைல் சிங், நாகராஜ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

அவர்களில் 3,800-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் (கேடர்கள்) உள்ளன. அந்த பணியிடங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அதிகாரிகள் பதவி உயர்வு பெறுகின்றனர். ஆனால், இடஒதுக்கீடு முறையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு போதிய அளவுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. எனவே, அவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்க அளவு நிர்ணயம் செய்ய வேண்டும். பதவி உயர்வுக்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று வழக்கு மனுவில் அவர்கள் கோரியிருந்தனர்.

இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதால் அரசு நிர்வாகத்தின் செயல் திறன் பாதிக்காது. ஏனெனில், செயல் திறன் உள்ள மற்றும் தகுதியானவர்களே பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்படுவர்.

மேலும், பதவி உயர்வை உறுதிப்படுத்தும்போது, ஆண்டுதோறும் செயல்திறனும் மதிப்பீடு செய்யப்படும். சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த குழுவும் அனைத்து தகுதிகளையும் தீர்மானிக்கிறது. இதனால், தகுதியற்றவர்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள்’ என்று தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அளவை இந்த நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது. கடந்த 2006-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், மாநில அரசுகள்தான் இதுகுறித்த தரவுகளை சேகரிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டிபிரிவினருக்கான இடஒதுக்கீடு பிரதிநிதித்துவம் போதுமானதாக உள்ளதா என்ற புள்ளிவிவரங்களை மாநில அரசுகளே சேகரிக்க வேண்டும்.

மேலும், பதவி உயர்வு தொடர்பான விஷயம் மத்திய, மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டது. இந்த விஷயத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.