அசையா சொத்துகளுக்கு நியாய வாடகை நிர்ணயம், வசூலித்தல் பற்றி ஆய்வு செய்ய தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவுக்கு உதவ உபக்குழுவை இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்கள், அனைத்து உதவி ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்து சமய அறநிறுவனங்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களுக்கு சட்டப்பிரிவுப்படி நியாய வாடகை நிர்ணயம் செய்தல் மற்றும் வாடகை நிலுவையினை வசூவித்தல் பற்றி ஆய்வு செய்ய அரசின் தலைமைச்செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட அலுவல் குழு ஏற்படுத்தி அரசு ஆணையிட்டுள்ளது.

அலுவல் குழுவிற்கு உதவிட இத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நன்கு அனுபவம் வாய்ந்த அலுவலர்களைக் கொண்ட உபகுழு ஏற்படுத்தி உத்தரவிடப்பட்டது. கோயில் அசையா சொத்துக்களுக்கு நியாய வாடகை நிர்ணயம் செய்வது சம்பந்தமாக எழும் பிரச்னைகள் தொடர்பாக அனைத்து சார்நிலை அலுவலர்களின் கருத்துக்களையும் கேட்டறியலாம் என உபகுழு முடிவு எடுத்துள்ளது. இவ்விவரங்களுக்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.