ஆம்பூர் துத்திப்பட்டு மற்றும் பெரியவரிகம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை, காலணி தொழிற்சாலைகள் குடியிருப்பு இடங்களுக்கு மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஏரிகள் நிரம்பியது கால்வாய்கள் முழுவதும் ஆக்கிரமிப்பால் குடியிருப்பு பகுதி, விவசாய நிலங்கள், தொழிற்சாலை என முற்றிலும் மழைநீர் சூழ்ந்ததால்  மாவட்ட திட்ட இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தமிழக, ஆந்திர நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளான பொண்ணபள்ளி, மிட்டாளம், அரங்கல்தூருகம் ஆகிய பகுதிகளில் தொடர் கனமழையால் மாதனூர் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் உள்ள 210 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி மற்றும் 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறிய ஏரி ஆகியவை தனது முழு கொள்ளளவை எட்டியது.

தற்போது உபரி நீர் வெளியேறி வருகிறது ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் கால்வாய்கள் முழுவதும் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் கால்வாய்களில் தண்ணீர் செல்லாமல் வெங்கடசமுத்திரம் மற்றும் ராமச்சந்திராபுரம் ஆகிய பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

மேலும், துத்திப்பட்டு மற்றும் பெரியவரிகம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை,  காலணி தொழிற்சாலைகள் குடியிருப்பு பகுதிகள் என அனைத்து இடங்களுக்கும் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை அறிந்த திருப்பத்தூர் மாவட்ட திட்ட இயக்குனர் செல்வரசு மற்றும்  அதிகாரிகள் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர் மேலும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பை செய்யப்பட்டுள்ள இடத்தை உடனடியாக அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.