தகவல் தொழில்நுட்பத்தில் உலக அளவில், தமிழ்நாடு கவனத்தை ஈர்த்து வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக இளைஞர்கள் கூர்மையான அறிவுத்திறன் உடையவர்கள் என்றும், நாட்டிலேயே தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பான CII மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து, கனெக்ட் என்ற பெயரில், 2 நாட்கள் கருத்தரங்கை சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்துகின்றன. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய ஸ்டாலின், 24 ஆண்டுகளுக்கு முன்பே தகவல் தொழில்நுட்பத்துக்கு அடித்தளமிட்டது திமுக ஆட்சி என்றும், இதனால் பெருமிதம் அடைவதாகவும் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத்தில் உலகளவில் கவனத்தை தமிழ்நாடு ஈர்த்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கி அவர்களை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்தியாவின் மொத்த மின்னணு உற்பத்தியில் தமிழகம் 16 விழுக்காடு பங்களித்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.