இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் மறைவுக்கு செய்தி கேட்டு வருத்தமுற்றேன் என முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில்:

“இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் உடல்நலக்குறைவால் தனது 98 வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்குள்ளானேன்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயின்றவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். மன நோயாளிகளின் சிகிச்சையில், மறுவாழ்வு அளிப்பதில் தனி முத்திரை படைத்த சாதனையாளர். சிறந்த மருத்துவர் மட்டுமல்லாது – சிறந்த நிர்வாகத் திறனும் படைத்தவர். சென்னையில் சாரதா மேனன் நிறுவி இயங்கி வருந்த ‘மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனத்தின் (SCARF)’ பங்களிப்புகளில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாகும். அவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

சிறந்த மருத்துவ சேவைக்காக தமிழ்நாடு அரசின் அவ்வையார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற சாரதா மேனன் அவர்களின் மறைவு மருத்துவத்துறைக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், மருத்துவத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.