சென்னை: சென்னையில் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தினால் பறிமுதல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டுப் பணிகள் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்த சேவைத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆணையர் பேசுகையில், “சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை குழாய், குடிநீர் குழாய் பதித்தல், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், மின்துறை பணிகள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் போது ஏற்படுகின்ற சாலை வெட்டுக்களை அந்தப் பணிகள் முடிவுற்றவுடன் உடனடியாக சாலை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து, பொதுமக்களுக்கு இடையூறின்றி பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.

அனுமதியின்றி சாலை வெட்டுக்களை தன்னிச்சையாக மேற்கொள்ளக் கூடாது. மாநகராட்சியிடம் உரிய அனுமதியைப் பெற்றவுடன் தான் சாலை வெட்டுக்களை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் குழாய் சாலை வெட்டுக்களை மேற்கொள்ளும்போது அனுமதி பெற்று மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் உள்ள பள்ளங்களையும் சீர்செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் பொழுது பணிகள் தொடங்கப்பட்ட நாள் மற்றும் முடிவுறும் நாள் ஆகியவற்றை விளம்பரப் பலகைகளை அமைத்து பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். சாலை வெட்டுப் பணிகள் மேற்கொள்ளும்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும், போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாத வகையிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தியுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, அந்த வாகனங்களை கைப்பற்ற வேண்டும். மேலும், கேட்பாரற்று நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத வாகனங்களை அகற்றி நடவடிக்கை மேற்கொள்வதோடு, எளிதான போக்குவரத்துக்கு வழிவகை செய்திட வேண்டும்.

பருவமழைக்கு முன்னதாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முடித்திட வேண்டும். விடுபட்ட மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகளையும் உரிய துறைகளுடன் ஒருங்கிணைந்து முடித்திட வேண்டும்” என்று அவர் பேசினார்.