கோவை: கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவையில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ”கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி, கவுண்டம்பாளையத்தை அடுத்த ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில் உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி.துறை, ஆட்டோமொபைல், விற்பனைத் துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்திற்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். 8-ம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுகலைபட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் முகாமில் பங்கு பெறலாம்.

இம்முகாமிற்கு வருவோர் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இதில் கலந்துகொள்ள வயதுவரம்பு இல்லை. கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம். தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும். பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது cbejobfair2021@gmail.com என்ற முகவரியில் விவரங்களை அனுப்பி தங்களது விருப்பம் தெரிவிக்கலாம். வேலையளிப்போர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Employer Login ல் விவரங்களை பதிவுசெய்தல் அவசியம். கூடுதல் விவரங்களுக்கு, வேலையளிப்போர் 9790199681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வேலைதேடுவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate login-ல் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வேலை தேடுவோர் 9499055937 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொள்ளலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.