சென்னை: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 550 கோயில்களில் பக்தர்களுக்கு இணையம் வாயிலாக 255 கட்டணச் சேவைகள் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கிவைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனி இணையதளம் உருவாக்கப்பட்டு, அதில் கோயில் சொத்துகள், கோயிலுக்கு சொந்தமான விலை மதிப்பற்ற விக்கிரகங்கள் பற்றிய விவரங்களை பதிவேற்றம் செய்து ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கோயில் சொத்துகளின் குத்தகைதாரர்கள், வாடகைதாரர்களுக்கு இணையவழியிலும், வசூல் மையங்களில் கணினி மூலமாகவும் ரசீதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, கோயில்களில் உள்ள அனைத்து கட்டண சேவைகளையும் இணையவழியில் முன்பதிவு செய்துகொள்ளவும், கோயில் கட்டணச் சீட்டு மையங்களில் கணினி வாயிலாக ரசீது பெறுவதற்கும் துறையின் இணையதளத்தில் (www.tnhrce.tn.gov.in) வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, அதிக பக்தர்கள் வருகை தரும் 550 பிரசித்தி பெற்ற கோயில்களில் அர்ச்சனை, அபிஷேகம், வடைமாலை கட்டணம், தங்க ரதம், வெள்ளி ரதம் கட்டணம், ரோப்கார், திருமணக் கட்டணம், சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி பூஜை கட்டணம் உள்ளிட்ட 255 வகையானசேவைகளுக்கு இணையவழியில் முன்பதிவு செய்யலாம். கட்டணம் செலுத்தியவுடன் ரசீதுகளை பதிவிறக்கம் செய்யலாம். பக்தர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் ரசீதுகள் அனுப்பப்படும். கோயில் கட்டணச் சீட்டு மையங்களில் கணினி வாயிலாகவும் இந்த சேவைகளை பெறலாம். இதற்கு ரசீதுகள் வழங்கப்படும். ரசீதுகளில் விரைவு பரிசோதனை குறியீடுகள் இருக்கும். இக்குறியீடுகளை கோயில்களில் பரிசோதனைக் கருவி மூலம் பரிசோதித்து, பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதுதொடர்பாக குறைபாடுகள் இருந்தால், ஆணையர் அலுவலக உதவி மையத்தை 044-28339999 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அறநிலையத் துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.