பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

பிளாக்செயின் எனப்படும் இணைய வழி ஆவண பரிமாற்றத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2021, 2022 ஆம் ஆண்டுகளின் விருதாளர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விருதாளர்களுக்கு முதன்முறையாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி சுபின் இரானி, இணையமைச்சர் டாக்டர் முஞ்பரா மகேந்திரபாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்தியப்பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த சிறுவன் அவி சர்மாவுடன் கலந்துரையாடிய பிரதமர், ராமாயணத்தின் பல்வேறு அம்சங்களை சிறந்த முறையில் வெளிப்படுத்தியிருப்பதன் ரகசியம் பற்றி கேட்டார். முழு ஊரடங்கின்போது ராமாயணம் தொடரை ஒளிபரப்புவது என்ற முடிவால் தாம் ஊக்கம் பெற்றதாக அவி சர்மா கூறினார். அவரது படைப்பில் சில பாடல் வரிகளையும் பாடினார். உமாபாரதி குழந்தையாக இருந்தபோது ஒரு நிகழ்ச்சியில் அவரது ஆழமான ஆன்மீகத்தையும், அறிவுத்திறனையும் வெளிப்படுத்தியதைப் பிரதமர் அப்போது எடுத்துரைத்தார்.

மத்தியப்பிரதேச மண்ணில் வயதுக்கு மீறிய திறனை அளிப்பதற்கான ஏதோ ஒன்று இருக்கிறது என்று அவர் கூறினார். மிகச் சிறியவர்களும், பெரிய செயல்களை செய்யலாம் என்பதற்கு அவர் ஓர் உதாரணமாகவும், உந்து சக்தியாகவும் இருப்பதாக அவியிடம் பிரதமர் கூறினார்.

கர்நாடகாவைச் சேர்ந்த செல்வி ரிமோனா எவடே பெரிராவுடன் உரையாடிய பிரதமர், இந்திய நடனத்தில் அவரது ஆர்வம் குறித்து விவாதித்தார். இந்த ஆர்வத்தைத் தொடரும்போது எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றியும் அவர் கேட்டறிந்தார். தமது மகளின் கனவுகள் நிறைவேற சொந்த நலன்களை மறந்த அவரது தாயாரை பிரதமர் பாராட்டினார். ரிமோனாவின் சாதனைகள் அவரது வயதை விட மிகவும் பெரியவை என்று கூறிய பிரதமர், இந்த மகத்தான தேசத்தின் பலத்தை வெளிப்படுத்தும் ஒரு வழியாக இந்தக் கலை உள்ளது என்று அவரிடம் தெரிவித்தார்.

திரிபுராவை சேர்ந்த புகாபி சக்கரவர்த்தியுடன் உரையாடிய பிரதமர், கோவிட் தொடர்பான அவரின் புதிய கண்டுபிடிப்பு பற்றி விசாரித்தார். விளையாட்டு வீரர்களுக்கான தமது உடல் தகுதி செயலி பற்றி பிரதமரிடம் அவர் எடுத்துரைத்தார். இந்த முயற்சியில் பள்ளி, நண்பர்கள், பெற்றோர்களிடமிருந்து அவர் பெற்ற ஆதரவு பற்றி பிரதமர் வினவினார்.

விளையாட்டுக்களுக்கும் அதே சமயம் புதிய செயலி உருவாக்கத்திற்கும் அவரது நேரத்தை சமமாக பகிர்ந்தது பற்றியும் பிரதமர் கேட்டறிந்தார்.

பிஹார் மாநிலத்தின் மேற்கு சம்ப்ரானைச் சேர்ந்த சிறுவன் திராஜ் குமாருடன் உரையாடிய பிரதமர், முதலைத் தாக்குதலிலிருந்து இளைய சகோதரரைக் காப்பாற்றிய சம்பவம் பற்றி அவரிடம் கேட்டறிந்தார். இளைய சகோதரரைக் காப்பாற்றிய போதும் இப்போது புகழ் பெற்றுள்ள போதும் அவரது மனநிலை எப்படி இருக்கிறது என்பது பற்றியும் பிரதமர் கேட்டார். அந்த சிறுவனின் துணிச்சலையும், சமயோசித அறிவையும் பிரதமர் பாராட்டினார். ஒரு ராணுவ வீரராக நாட்டிற்கு சேவை செய்ய தாம் விரும்புவதாக பிரதமரிடம் திராஜ் கூறினார்.

பஞ்சாபை சேர்ந்த சிறுவன் மீதான்ஷ் குமார் குப்தாவுடன் உரையாடிய பிரதமர், கோவிட் பிரச்சனைகளுக்கான செயலியை உருவாக்கி சாதனைப் படைத்தது பற்றி பிரதமர் விசாரித்தார். தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான அரசியல் முயற்சிகள் பயன் தந்துள்ளதையும் வேலை தேடுவோர் என்பதற்கு மாறாக வேலை தருவோராக மாறியிருப்பதையும் மீதான்ஷ் போன்ற இளையோர்களிடம் காண்பதாக பிரதமர் கூறினார்.

சண்டிகரைச் சேர்ந்த தாருஷி கவுருடன் உரையாடிய பிரதமர், விளையாட்டுக்கும், படிப்புக்கும் இடையே சமச்சீராக இருப்பது பற்றி கருத்து கேட்டார். குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமை முன்மாதிரியாக தாருஷி எடுத்துக் கொண்டது ஏன்? என்று பிரதமர் வினவினார்.

அவரது சிறப்பான செயல்பாடும் விளையாட்டு வீராங்கனையாகவும், ஒரு தாயாகவும் சமநிலையில் இருந்தது ஆகியவையே அவர் மீதான ஈர்ப்புக்கு காரணம் என்று பிரதமரிடம் தாருஷி கூறினார். விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து வசதிகள் கிடைப்பதற்கும் எந்த நிலையிலும் வெல்வதற்கான மனநிலையை உருவாக்குவதற்கும் அரசு உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் கூறினார்.