கரோனா தொற்றில் இருந்து மீண்டுதமிழகம் தற்போது வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பதால், அடுத்த ஆண்டு நபார்டு வங்கி அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார்.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு)சார்பில், ‘மாநில கடன் கருத்தரங்கு 2022-23’, சென்னையில் நேற்று நடந்தது. இதில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2022-23 நிதியாண்டுக்கான வளம் சார்ந்த மாநில அறிக்கையை வெளியிட்டார். பின்னர், கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

தமிழகம் தற்போது வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, கரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டுள்ளது.

எனவே, அடுத்த ஆண்டு தமிழகத்துக்கு அதிக நிதியை நபார்டு வங்கி ஒதுக்க வேண்டும். 2019, 2020-ம் ஆண்டுகளில் 100 சதவீத நிதி தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2021, 2022-ல்50 சதவீதம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிலும், அடுத்த ஆண்டுக்கு 25 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. இதை சற்று அதிகமாக உயர்த்த நபார்டு வங்கிநடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா தொற்றால் அனைத்து துறைகளும் பாதிப்படைந்தன. தற்போது அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றன. இதன்மூலம், மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கிஉள்ளது. தனிநபர்கள், விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினருக்கு வங்கிகள் கடன் வழங்குவது தற்போதைய சூழலில் மிகவும் அவசியம்.

தரவு சார்ந்த நிர்வாகத்தை வழங்குவதில் மாநில அரசு அதிக கவனம்செலுத்தியுள்ளது. இது நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் அனைத்து துறைகளுடன் சிறந்த இணைப்பை கொண்டு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கருத்தரங்கில் பேசிய நபார்டு வங்கி தமிழக மண்டல அலுவலக தலைமை பொதுமேலாளர் தி.வெங்கடகிருஷ்ணா, ‘‘தமிழகத்துக்கு 2022-23 நிதியாண்டுக்கான முன்னுரிமை துறை கடன்ரூ.4.13 லட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது,2021-22 ஆண்டுக்கான மதிப்பீட்டைவிட 20 சதவீதம் அதிகம். இதில்,விவசாயத் துறைக்கு ரூ.1.43 லட்சம் கோடியும், குறு, சிறு, நடுத்தரதொழில் துறைக்கு ரூ.1.31 லட்சம்கோடியும், இதர துறைகளுக்கு99 ஆயிரம் கோடியும் அடங்கும்.

நபார்டு வங்கி தமிழகத்தில் 2020-21 ஆண்டில் ரூ.27,135 கோடிகடனுதவி வழங்கியுள்ளது. நடப்புநிதியாண்டில் ரூ.40 ஆயிரம் கோடிஅளவுக்கு கடன் வழங்க இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

கருத்தரங்கில், இந்தியன் வங்கிமேலாண்மை இயக்குநர் சாந்திலால் ஜெயின், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குநர் ஏ.கே.வஸ்தவா, ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்எம்என் சுவாமி உள்ளிட்டோர் பேசினர்.

சிறப்பான சேவைகள் வழங்கியதற்காக பொதுத் துறை, கூட்டுறவு, தனியார் வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.