ஒரே நிதியாண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதற்கும் மேலான தொகையை வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கும் அலல்து டெபாசிட் செய்வதற்கும் பான் கார்டு அல்லது ஆதார் எண்ணை தெரிவிப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அனைத்து விதமான வங்கிகளிலும் அமலுக்கு வந்துள்ளது. அதாவது, இந்தப் புதிய விதி வணிக ரீதியிலான வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அஞ்சலக கணக்குகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதியை மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 10-ஆம் தேதி வெளியிட்டிருந்தது. வரி ஏய்ப்பை தவிர்க்கும் நோக்கில் இந்த விதி அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வங்கிகளில் கணக்கு தொடங்கவும், வங்கிக் கணக்கில் 50,000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தவும் பான் எண் அவசியமாக உள்ள நிலையில், இந்த புதிய விதி அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது தவிர வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய, டீமேட் கணக்கு தொடங்க, 50,000 ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளை மேற்கொள்ளவும் பான் எண் அவசியம் தேவைப்படுகிறது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமான ஒன்றாகவும் உள்ளது. மேலும், நடப்பு கணக்கை தொடங்கி ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொள்ளவும் பான் அல்லது ஆதார் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.