2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த ஆணையிட வேண்டும் எனக் கோரி, பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு இன்று (ஆக. 28) ராமதாஸ் எழுதிய கடிதம்:

“பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் புதிய சாதிகளைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று மராத்தா இட ஒதுக்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் பறிக்கப்பட்ட மாநில அரசுகளின் சமூக நீதி உரிமையை மீண்டும் நிலைநாட்டும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 127ஆவது திருத்தத்தைச் செய்யும் அரசியல் சட்டத்திருத்த முன்வடிவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றியதற்காக உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உண்மையான சமூக நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு நான் எழுதுகிறேன்.

தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கையாகும். அதற்கான தேவை அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் முதன்மையான நோக்கங்களில் ஒன்று உள்ளடக்கிய வளர்ச்சி ஆகும். இந்தியா விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

ஆனால், அந்த வளர்ச்சியின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்தனவா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை ஆகும். அதனால்தான் இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

அதற்கான காரணங்களில் ஒன்று வளர்ச்சியால் கிடைக்கும் பயன்களை அனுபவிக்கும் அளவுக்கு சமூகத்தில் பின்தங்கிய மக்களால் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகளைப் பெற முடியவில்லை. இந்த நிலையைப் போக்கி அனைவருக்கும் கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைக்கச் செய்வதற்கான கருவிதான் இட ஒதுக்கீடு எனும் சமூக நீதி நடவடிக்கையாகும். இந்தியாவில் தேசிய அளவிலும், மாநிலங்களிலும் சமூக அளவிலான மக்கள்தொகை அடிப்படையில் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஆனால், தேசிய அளவிலும், மாநில அளவிலும் இட ஒதுக்கீட்டுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும், பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இட ஒதுக்கீட்டின் நியாயத்தை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நிரூபிக்க சாதிவாரி மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் தேவை. ஆனால், நம்மிடம் அது இல்லை. இந்தியா விடுதலை அடைந்த பிறகு இதுவரை வழங்கப்பட்ட எந்தவொரு எந்தவொரு இட ஒதுக்கீடும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப்படவில்லை.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளை எதிர்கொள்ள சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். இதைப் பல்வேறு தருணங்களில் உச்ச நீதிமன்றமும், பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களும் வலியுறுத்தியுள்ளன.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த காலங்களில் பலமுறை எழுப்பப்பட்டிருக்கிறது. மத்திய அரசும் அதைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த அப்போதைய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், அது சாதி, சமூக, பொருளாதாரக் கணக்கெடுப்பாக மாற்றப்பட்டது. அதன் விவரங்களும் கூட இன்று வரை வெளியிடப்படவில்லை.

இந்தியாவில் 1931ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 90 ஆண்டுகளாக நடத்தப்படாத சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை இந்த முறையாவது நடத்துவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும். கரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏற்கெனவே தாமதமாகிவிட்ட நிலையில், அதற்கான கட்டமைப்புகளில் சாதிவாரியாக மக்கள்தொகையைக் கணக்கெடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து, அதனடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதைச் செய்வது கடினமான ஒன்றல்ல. மத்திய அரசு நினைத்தால் சாத்தியமாகும்.

மராத்தா இட ஒதுக்கீட்டு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளைச் சேர்ப்பதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்று ஆணையிட்டது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளைக் களையும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மத்திய அரசு அண்மையில் திருத்தியது. அதேபோல், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பையும் மேற்கொள்ள சமூக நீதிக் கண்ணோட்டத்துடன் அரசு ஆணையிட வேண்டும்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதை இந்தியாவின் பெரும்பான்மையான தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் ஆதரிக்கின்றன. எனவே, 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையைப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக இந்தியாவின் பிரதமர் பதவியை அலங்கரிக்கும் தாங்கள் பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.