கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே நடந்த இருவேறு எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில், மாணவர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

வேப்பனப்பள்ளி அருகே ராமச்சந்திரம் கிராமத்தில் கடந்த 16-ம் தேதி எருதுவிடும் விழா நடந்தது. அப்போது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவி ராஜுவை (72) காளை முட்டியது. இதில், படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மற்றொரு சம்பவம்: வேப்பனப்பள்ளி அருகே நாடுவனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் பவன்குமார் (11), வேப்பனப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் வி.மாதேப்பள்ளி கிராமத்தில் நேற்று முன் தினம் நடந்த எருதுவிடும் விழாவைக் காண பவன்குமார் சென்றார்.

அப்போது, பார்வையாளர்கள் கூட்டத்துக்குள் புகுந்த காளை பவன்குமாரை முட்டியது. இதில், படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக வேப்பனப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.