பாந்த்ரா டெர்மினஸ் – லக்னோ சந்திப்பு வாராந்திர ரயிலில் பயணித்த பயணி ஒருவர் பயணத்தின்போது ஐஆர்சிடிசி பேன்ட்ரி விநியோகித்த சமோசாவை வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது அதில் மஞ்சள் நிற காகிதம் இருப்பதை கவனித்துள்ளார். உடனடியாக அதை அப்படியே தனது செல்போன் கேமராவில் படம் பிடித்து, அது குறித்து ட்வீட் செய்துள்ளார் அவர். அதோடு அதில் ஐஆர்சிடிசி-யை டேக் செய்துள்ளார். அதற்கு நெட்டிசன்கள் ரியாக்ட் செய்துள்ளனர்.

‘அந்நியன்’ படத்தில் அம்பியாக வரும் விக்ரம் ரயிலில் பயணம் மேற்கொள்ளும்போது தான் சந்தித்த சங்கடங்களை ‘டிடிஆர்’ என உரத்த குரலில் அவரை அழைத்து புகார் கொடுப்பார். கிட்டத்தட்ட இதுவும் அதேபோல ஒரு சம்பவம்தான். ஆனால், இந்தப் பயணி டிஜிட்டல் யுகத்தில் இருப்பதால் மிகவும் ஸ்மார்ட்டாக ட்வீட் மூலம் ஐஆர்சிடிசி உட்பட அனைவரது கவனத்திற்கும் எளிதாக இதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

“நான் 9.10.2022 அன்று லக்னோவுக்கு பயணம் செய்து கொண்டுள்ளேன். சாப்பிடுவதற்காக சமோசா வாங்கி இருந்தேன். கொஞ்சம் சாப்பிட்டேன். பிறகு அதை பார்த்தால் அதில் மஞ்சள் நிற காகிதம் ஒன்று உள்ளது. நான் வண்டி எண் 20921-ல் பயணிக்கிறேன். இதனை எனக்கு வழங்கியது ஐஆர்சிடிசி பேன்ட்ரி ஊழியர் தான். இந்த ரயில் 8.10.2022 அன்று புறப்பட்டது” என அஜித்குமார் என்ற அந்த பயனர் ட்வீட் செய்துள்ளார். அதோடு அதில் ஐஆர்சிடிசி ட்விட்டர் ஹேண்டிலை டேக் செய்திருந்தார்.

“சிரமத்திற்கு வருந்துகிறோம். உங்களது பிஎன்ஆர் விவரம் மற்றும் மொபைல் எண்ணை நேரடியாக மெசேஜ் செய்யுங்கள்” என்று ஐஆர்சிடிசி பதில் ட்வீட் போட்டிருந்தது. இருந்தாலும் அது நெட்டிசன்களை சமாதானம் செய்யவில்லை.

‘வழக்கமாக சமோசாவுக்குள் உருளைக்கிழங்குதான் இருக்கும். இது ஐஆர்சிடிசி-யின் புதிய ரெசிப்பியாக இருக்கும் என நினைக்கிறேன்’ என நெட்டிசன்கள் சில கருத்து தெரிவித்துள்ளனர்.