கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சிஎம்ஆர்எல்) பதில் அளித்துள்ளது.

கோவையில் மொத்தம் 139 கி.மீ. தூரத்துக்கு 3 கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விரிவான ஆய்வு, ஒப்புதல்களுக்குப் பிறகு 2-ம் கட்டம் மற்றும் 3-ம் கட்டப் பணிகள் தொடங்க உள்ளன. தற்போது உள்ள 139 கி.மீ. திட்டத்தில் இருந்து மேலும் நீட்டிப்பு மற்றும் புதிய பகுதிகளைச் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

கோவையில் முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் கட்டப்படும் இடங்களுக்கு இணையாக மெட்ரோ ரயில் தடம் அமைய உள்ளது. அதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. போதுமான வாகன நிறுத்துமிட வசதி, எஸ்கலேட்டர்கள், லிப்ட் வசதி, ஏற்கெனவே உள்ள சாலையைக் கடப்பதற்கு இடவசதி உள்ள இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், பெரிய நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் பொது, தனியார் பங்களிப்பின் கீழ் மெட்ரோ ரயில் நிலையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி மதிப்பீடு செய்திருப்பதாகவும், 2027-ம் ஆண்டில் பணிகள் நிறைவடையும் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறும்போது, “முடிவடைந்த பணிகள், நடைபெற்றுக்கொண்டிருக்கிற பணிகள், பரிந்துரைக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த விவரங்களை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் கேட்டிருந்தேன்.

அதில், விரிவான திட்ட அறிக்கைப்படி (டிபிஆர்) கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒப்புதல் அளித்தால், 2027-ம் ஆண்டுக்குள் பணிகள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.