சென்னை: மெரினா கடற்கரையில் உள்ளகருணாநிதி நினைவிட வளாகத்தில் 1,500 சதுரமீட்டரில் அமைக்கப்படும் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி, தாழ்தளத்தில் அமைகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அவரது உடல், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடவளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் நினைவிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுதவிர, நினைவிடத்தின் அருகில் வங்கக்கடலில் ரூ.81 கோடியில் கருணாநிதி நினைவாக பேனாநினைவுச் சின்னம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது. அண்மையில் இதற்கான கருத்துக்கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கருணாநிதி நினைவிட வளாகத்தில் ரூ.80 லட்சத்தில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து இதற்கான ஒப்புதலை பெற மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை குழு ஒப்புதலுக்கு அனுப்பியது. அங்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மாநில கடலோர மண்டல மேலாண்மைக் குழுவுககு கருத்துரு பரிந்துரைக்கப்பட்டது. அருங்காட்சியகம் அமைக்க மாநில கடலோர மேலாண்மைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, 1,500 சதுர மீட்டர் பரப்பில் அதாவது 160 சென்ட்அளவில் அமையும் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி தாழ்தளத்தில் அமைக்கப்படுகிறது. பார்வையாளர்கள் சாய்தளம் மூலம் தாழ்தளத்துக்கு சென்று அங்கு அருங்காட்சியகத்தை பார்வையிட முடியும். நினைவிட பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், பேனா நினைவுச் சின்னத்துக்கு ஒப்புதல் பெறும் நடவடிக்கையில் பொதுப்பணித் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.