அரிசி, கோதுமை, தயிர் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டி வரி தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

அரிசி, பால், தயிர் போன்ற அத்தியாவசிய பொருட்களின் ஜி.எஸ்.டி வரி விகிதத்தை உயர்த்தி 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இந்த புதிய வரி விதிகள்  நேற்று அமலுக்கு வந்தது.

எடையளவுச் சட்டத்தின் (Metrology Act), படி பேக் செய்யப்பட்ட பால், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரியாக விதித்து ஜூலை 18ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென கடந்த ஜூன் மாதமே ஜி.எஸ்.டி கவுன்சில் செய்தி வெளியிட்டது. விலக்கு அளிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, மாவு உள்ளிட்ட பொருட்களுக்கும் தற்போது 5 சதவீதமாக ஜி.எஸ்.டி விதித்து ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டன.

இதனால் அரிசி, கோதுமை, தயிர், லஸ்ஸி போன்ற பொருட்களின் விலை உயர்ந்தது. அரிசிக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரிசி ஆலைகள்,கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், அரிசி, கோதுமை, தயிர் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டி வரி தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட பொருட்களை பேக்கிங் செய்து விற்றால் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றுள்ளார்.