சென்னை: டாஸ்மாக் நிறுவனம் போல் வருமானம் தருவதாக இருந்தால், வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக வனப் பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சத்தியமங்கலம், முதுமலை சரணாலயங்களில் 1,500 ஹெக்டேர் பரப்புக்கு அந்நிய மரங்கள் பரவியுள்ளன. போர்க்கால அடிப்படையில் அவற்றை அகற்றாவிட்டால் நாட்டு மரங்கள் பாதிக்கப்படும். இந்த அந்நிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்துடன் ஆலோசனை நடந்து வருகிறது. இதுதவிர ரசாயன முறைப்படி கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நிய மரங்களை அகற்ற 536 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனைமலை, சத்தியமங்கலம், முதுமலை, தர்மபுரி, திண்டுக்கல் மண்டலங்களில் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அந்நிய மரங்களால் உள்நாட்டு மரங்கள் பலியாவதை ஒத்துக் கொள்ளும் அரசு, அறிக்கை தாக்கல் செய்வதை தவிர, என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்நிய மரங்களை அகற்றும் பணியை ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்களிடம் ஏன் வழங்க கூடாது? அரசின் திட்டங்கள் காகிதங்களில் தான் உள்ளது எனவும், செயலில் எதுவுமில்லை எனவும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வேலை உறுதி திட்ட நிதி பயன்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்ட பின், ஏன் ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினர். அந்நிய மரங்களால் வனத்துக்கும், வன விலங்குகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளன. எதிர்காலத்தில் சரணாலயங்கள் அழிந்து விடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர், அந்நிய மரங்களை முழுமையாக அகற்றுவது தொடர்பாகவும், எவ்வளவு பரப்பில் அன்னிய மரங்கள் அகற்றப்பட உள்ளது என்பது குறித்த நடவடிக்கை குறித்த திட்ட அறிக்கையை மூன்று வாரங்களில் தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுபான விற்பனை செய்யும் டாஸ்மாக் நிர்வாகம் போல வருமானம் தருவதாக இருந்தால் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.