ரவுடிகளை அடக்கி ஒடுக்குவதில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை போலவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் நடவடிக்கை மேற்கொள்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால், மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள், மேடு பள்ளமாக உள்ளது. அதை விரைவில் சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை தண்ணீர், குடிநீரில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கடந்த ஆட்சி காலங்களில் கொடுக்கப்பட்ட டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. ஆனால், டெண்டர்களை தற்போது ரத்து செய்துவிட்டனர்.
அந்த பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலங்களில் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அதே போல தற்போதைய முதல்-அமைச்சர் ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துள்ளார். அது வரவேற்கத்தக்கது.