சென்னையில் சாதகமில்லாத வானிலை நிலவியதால் காற்று மாசு திடீரென அதிகரித்து பனிமூட்டம் ஏற்பட்டது போன்ற சூழல் நேற்று நிலவியது.

சென்னையில் நேற்று அதிகாலையில் வழக்கத்துக்கு மாறாக பனிமூட்டம் போன்று நிலவியது. காலை 6.30 மணிக்கு கூட வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. அதே நேரத்தில் பனிமூட்டம் இருந்த அளவுக்கு குளிர் இல்லை.

இதனிடையே சென்னையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் 5 இடங்களில் பதிவு செய்யப்பட்ட மாசு அளவை ஆய்வு செய்தபோது, அனைத்து இடங்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட காற்று மாசு அதிகரித்திருப்பது தெரியவந்தது.

சென்னையில் 2.5 மைக்ரான் அளவுள்ள காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் (மாசு), ஒரு கனமீட்டர் காற்றில் 60 மைக்ரோகிராம் இருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால் கொடுங்கையூர், அரும்பாக்கம், மணலி, பெருங்குடி, ராயபுரம் ஆகிய 5 இடங்களிலும் சராசரி அளவை விட அதிகமாக பதிவாகி இருந்தது. அதன்படி அரும்பாக்கம், மணலி, பெருங்குடி ஆகிய இடங்களில் 5 மடங்கும், கொடுங்கையூர், ராயபுரம் ஆகிய இடங்களில் 4 மடங்கும் அதிகமாக மாசு பதிவாகி இருந்தது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசனிடம் கேட்டபோது, ‘‘தற்போது கிழக்கு திசைக்காற்று வலுவாக வீசவில்லை. சில நேரங்களில் காற்றே வீசுவதில்லை. தற்போது நிலப்பகுதி குளிர்ச்சியாக உள்ளது. இதனால் நிலப்பகுதியில் ஏற்படும் மாசு,வளிமண்டலம் நோக்கி சென்றுஇயல்பாக சிதைவடைவது தடைபட்டு, மாசு கீழேயே தங்கி விடுகிறது’’ என்றார்.

சாதகமில்லாத வானிலை காரணமாக நிலப்பகுதியில் உருவான வாகனப் புகை, சாலை புழுதி, கட்டுமானங்களால் உருவான மாசு கலந்த காற்று மேலே செல்லாமல் பனி மூட்டம் போல் நிலவியது தெரியவந்துள்ளது.

இது சென்னை மாநகருக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே வானிலை சாதகமில்லாத நேரத்தில் கணக்கிடப்படும் மாசு அளவு அடிப்படையில், சென்னையில் மாசுவை குறைப்பதற்கான திட்டங்களை அரசுஉருவாக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

வானிலை சாதகமில்லாத நேரத்தில் கணக்கிடப்படும் மாசு அளவு அடிப்படையில், சென்னையில் மாசுவை குறைப்பதற்கான திட்டங்களை அரசுஉருவாக்க வேண்டும்.