ஆயுத பூஜை விடுமுறைக்கு ஆர்யா நடிப்பில் 2 படங்கள் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மிருணாளினி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘எனிமி’. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறையைக் கணக்கில் கொண்டு அக்டோபர் 14-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பால் மற்றொரு படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, சுந்தர்.சி, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அரண்மனை 3’. நீண்ட நாட்களாக இந்தப் படம் தயாரிப்பில் உள்ளது. தற்போது இறுதிக்கட்டப் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தினை அக்டோபர் 14-ம் தேதி வெளியிடலாம் என்று திட்டமிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஆனால், தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த அறிவிப்பில் ‘எனிமி’ படக்குழு முந்திக் கொண்டது.

அக்டோபர் 14-ம் தேதியை விட்டுவிட்டால் வேறு நல்லதொரு தேதி கிடைக்காது என்பதால், இதே தேதியில் வெளியிட்டுவிடலாம் என்று ‘அரண்மனை 3’ படக்குழு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு வெளியிடப்பட்டால் ஒரே தேதியில் இரண்டு ஆர்யா படங்கள் வெளியாகும் சூழல் ஏற்படும்.