ஈரோடு ரயில் நிலையத்துக்கு தன்பாத்திலிருந்து வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 2 கிலோ கஞ்சாவை ஈரோடு ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு ரயில் நிலையத்துக்கு தன்பாத்திலிருந்து ஆலப்புழா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வந்தது. ரயிலில் ஈரோடு ரயில்வே போலீஸார் சோதனை நடத்தினர். 2 பெட்டியில் சோதனை நடத்திய போது கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்த பையை திறந்து பார்த்ததில் 2 கிலோ கஞ்சா இருந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் அதனை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஈரோடு ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு கஞ்சா கடத்தியவர்களை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர்.