தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் டிசம்பர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in, மற்றும் tnstc official app, ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை 9445014426, திருநெல்வேலி 9445014428, நாகர்கோவில் 9445014432, தூத்துக்குடி 9445014430, கோயம்புத்தூர் 9445014435, தலைமையகம் 9445014435, 9445014424 மற்றும் 9445014416, ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.