ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா, அதன் பிறகு கலந்து கொண்ட முதல் சர்வதேசப் போட்டியில் நேற்று பின்லாந்து துர்க்குவில் ஜாம்பவான்களுடன் ஆடிய பாவோ நூர்மி போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்ததோடு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதற்கு முன்பாக பாட்டியாலாவில் 88.07 மீ தூரம் விட்டெறிந்தது நீரஜ் சோப்ராவின் தேசிய சாதனையாக இருந்தது. ஆனால் இதைவிடவும் குறைவாக 87.58 மீ விட்டெறிந்து ஒலிம்பிக் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.

நேற்று நடந்த இந்த ஜாவ்லின் த்ரோ போட்டியில் பின்லாந்தைச் சேர்ந்த ஆலிவர் ஹெலாண்டர் 89.83 மீ தூரம் விட்டெறிந்து தங்கம் வென்றார்.

நேற்று முதலில் 86.92 மீ தூரம் ஈட்டி எறிந்து பிரமாதமாகத் தொடங்கிய நீரஜ் சோப்ரா, அடுத்த 3 முயற்சிகள் ஃபவுலில் முடிந்தது. 6வது மற்றும் கடைசி த்ரோவில் 85.85 மீ தூரம் எறிந்தார். ஆனால் இவர் எறிந்த 89.30 மீ தூரம் வெள்ளிப் பதக்கத்துக்குரியதானது.

பின்லாந்து வீரரின் சொந்த சாதனை நீரஜை விட குறைவுதான், அதாவது 88.02 மீ தான் அவரது சாதனையாக இருந்தது, ஆனால் நேற்று 89.83 மீ ஈட்டி எறிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி தங்கம் வென்றார்.

உலக சாம்பியன் கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.60 மீ தூரமே விட்டெறிந்து ஏமாற்றமளித்தார், இவரது சொந்த சாதனை 93.07 மீ, ஆனால் நேற்று அவர் 87ஐக்கூட தொட முடியவில்லை. இதனால் 3வதாக முடிந்தார்.

2012 ஒலிம்பிக் சாம்பியன் டிரினிடாடைச் சேர்ந்த கேஷோன் வால்காட் 84.02 மீ விட்டெறிந்து 4ம் இடமும் ஜெர்மனியின் ஜூலியன் வீபர் 84.02 மீ தூரம் எறிந்து 5ம் இடமும் பிடித்தனர். சோப்ராவுக்கு கடும் போட்டி அளிக்கும் வெட்டர் நேற்று ஆடவில்லை. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஜேகப் வால்டேயிச் 83.91 மீ தூரமே எறிந்து 6ம் இடம் பிடித்தார்.

சோப்ரா அடுத்ததாக வரும் சனிக்கிழமை பின்லாந்தில் கூர்ட்டானே விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கிறார்.