சென்னை: சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே 6 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டது. சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள தாம்பரம் பனிமலையில் 11 முதல் 15 வரை பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள தாம்பரம் பணிமனையில் வருகிற 11, 12, 14 மற்றும் 15-ந்தேதிகளில் இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதையடுத்து கீழ்க்கண்ட மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை), 13 மற்றும் 14-ந் தேதிகளில் இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரெயில்களும், கடற்கரையில் இருந்து அதே 4 நாட்களில் இரவு 11.20 மணி, 11.40 மணி மற்றும் 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.