செவிலியர் பணி நீக்கத்தை ரத்து செய்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடிய வந்த ஆசிரியர்கள் உணர்வை மதித்து, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வழிவகைகளை ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைகள் வழங்க நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்தும், ஆசிரியர், அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தியும் உத்தரவிட்ட முதலமைச்சர் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் வரவேற்பதுடன் கரோனா கால நெருக்கடியில் தற்காலிக பணியாக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஏற்கத்தக்கது அல்ல.

இது தொடர்பாக முதல்வர் நேரடியாகத் தலையிட்டு, பெருந்தொற்றுப் பரவல் காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்து செவலியர்களின் பணி, பெருந்தொற்று உருமாறிய வடிவங்களில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் மிக, மிகத் தேவை என்பதை கருத்தில் கொண்டு செவிலியர்கள் பணி நீக்கம் உத்தரவை ரத்து செய்து, அவர்களை மீண்டும் பணியமர்த்துமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு, தமிழ்நாடு அரசையும், முதல்வரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.