கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படத்துக்கு ‘வெந்து தணிந்தது காடு’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படத்துக்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனப் பெயரிடப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரிந்து வந்தார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பெயர் மாற்றப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், படக்குழுவினர் எதையும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தார்கள். இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 6) திருச்செந்தூரில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, படத்தின் புதிய தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ‘வெந்து தணிந்தது காடு’ என்று பாரதியாரின் கவிதை வரிகளைப் பெயராக வைத்துள்ளது படக்குழு. திருச்செந்தூரில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதில் சிம்பு உடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளது.