நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக இருக்கின்றனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்துள்ளார்.

அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகை தனது இசையால் ஆட்சி செய்து வரும் இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து, 5 முறை தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.

 

தற்போது 79 வயதாகும் இளையராஜாவுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு பதம் பூஷன் விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு. அதன் பின் 2018-ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. தற்போது நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இசை உலகின் நாயகனாக திகழ்ந்து, எண்ணற்ற மக்களின் மனம் கவர்ந்த இசைஞானி இளையராஜா அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு மனமார்ந்த பாராட்டுகள். மக்கள் சேவையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.