எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல்கட்டகலந்தாய்வில் 6,043 மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 73 பேரும், 28-ம் தேதி நடந்த 2-வதுநாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் 541 பேரும் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணையை பெற்றனர்.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் 5,291 எம்பிபிஎஸ், 1,348 பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் கடந்த ஜன.30-ம் தேதி தொடங்கியது. அன்று காலை 8 மணி முதல்பிப்.1-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிவரை பதிவு செய்வது நடந்தது.

அதில், கலந்தாய்வில் பங்கேற்குமாறு அழைக்கப்பட்டிருந்த தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் 1 முதல் 10,462 பேரில் (நீட் மதிப்பெண் – 710 முதல் 410 வரை) 9,951 பேர் ஆன்லைனில் பதிவு செய்தனர். கடந்த 2-ம் தேதி காலை 8 மணி முதல் 5-ம் தேதி மாலை 5 மணி வரை 9,723 பேர் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்தனர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருமாறு முதல் கட்டமாக 6,082பேருக்கு (69 சதவீத இடஒதுக்கீட்டின்படி) கடந்த 7-ம் தேதி அழைப்புவிடுக்கப்பட்டது. 8 முதல் 10-ம்தேதி வரை 6,043 பேர் 38 அரசுகல்லூரிகளுக்கு சென்று சான்றிதழ்களை சமர்ப்பித்து சரிபார்த்துக் கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வில் இடங்களை பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை.

வரும் 15-ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் https://tnmedicalselection.net மற்றும் https://www.tnhealth.tn.gov.in ஆகிய சுகாதாரத் துறை இணையதளங்களில் வெளியிடப்படும். 16-ம் தேதி கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

17-ம் தேதி முதல் 22-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கல்லூரிகளில் சேர்ந்துவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு, 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும். பொதுப் பிரிவு கலந்தாய்வுமுடிந்ததும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.