வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூலம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்திரவிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி காவல் துணை கண்காணிப்பாளராக சுரேஷ்குமார் உள்ளார். இவர் கடந்த 2006ம் ஆண்டு குமாரபாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்தார். அப்போது பதியப்பட்ட இரு வழக்குகளில் சாட்சியம் அளிக்க குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூலம் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

எனினும், அவர் ஆஜராகவில்லை. கடந்த மார்ச் 29 மற்றும் ஏப்ரல் 7 ஆகிய தேதியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாருக்கு மாஜிஸ்திரேட் சப்னா பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளார். டிஎஸ்பிக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.