புதுடெல்லி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர் லைட் ஆலையில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய மேல்முறையீட்டு மனு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு ஆகியவை நேற்று உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் ஆஜராகி, ஆலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தமிழக அரசுக்கு உத்தரவு

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ளவும், அங்குள்ள ஜிப்சம் உள்ளிட்ட மூலப் பொருட்களை எடுத்துக் கொள்வதற்கும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும்ஜூலை மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.