சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பட்டியலின மாணவி ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தன்னுடன் படித்த மாணவர்கள் சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினார். குறிப்பாக தன்னுடன் பயின்ற மாணவர் கிங்சோ தேப் சர்மா, சுபதீப் பானர்ஜி உட்பட 8 மாணவர்களால் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக பேராசிரியர்களிடம் புகார் தெரிவித்தார்.

ஆனால், அந்த மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வேதனை அடைந்தமாணவி 3 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் தரப்பட்டது. இதையடுத்து, 8 பேர் மீதுபோலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அப்போதும் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கடந்த 22-ம்தேதி மகளிர் ஆணையத் தலைவரை சந்தித்து மாணவி புகார் அளித்தார். இதையடுத்து, மயிலாப்பூர் காவல் துணை ஆணையரின் தனிப்படையினர், சம்பந்தப்பட்ட மாணவர்களை தேடி மேற்குவங்கம் விரைந்தனர். அங்கு தலைமறைவாக இருந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்சோ தேப்சர்மாவை தனிப்படையினர் கைதுசெய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 7 பேரை தேடி வருகின்றனர்.