சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களுக்கு இரட்டைப் பதவி உயர்வாக, மூன்று மாதங்களில் பேராசிரியர் பதவி உயர்வு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பதவி உயர்வு திட்டத்தின் அடிப்படையில், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் என இரட்டை பதவி உயர்வு வழங்குவதற்கு, கடந்த 2018-ம் ஆண்டு பல்கலைக்கழகம் சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்தப் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இணை பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இரட்டை பதவி உயர்வு வழங்காமல், இணை பேராசிரியர் பதவி உயர்வு மட்டும் வழங்கப்பட்டதை எதிர்த்து இணை பேராசிரியர்கள் கடந்த 2020-ம் ஆண்டு சென்னை உய ர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இணை பேராசிரியர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகம் தரப்பில், “குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இணை பேராசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு மட்டுமே பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும்” என விளக்கம் அளிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதவி உயர்வு குழு கடந்த 2011-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு தான் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட ஏழு ஆண்டுகளில் பல உதவி பேராசிரியர்கள் பலர் பதவி உயர்வு கிடைக்க பெறாமல் பணி ஓய்வு பெற்றுள்ளனர். எனவே, மனுதாரர்களுக்கு மூன்று மாதங்களில் பேராசிரியராக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.