சென்னை: சந்திரயான் முதல் ஆதித்யா வரை, நம் சாதனைத் தமிழர்கள்நிரூபித்து கொண்டே இருக்கின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் சாஜியை அகமகிழ்ந்துப் பாராட்டுகிறேன்.

மாநில அரசுப் பள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் பயின்றவர்கள் திறத்திலும், தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை, சந்திரயான் முதல் ஆதித்யா வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர்சாஜி தலைமைப் பொறுப்பேற்றிருப்பதைப் பார்த்து அவரதுகுடும்பத்தினர் எத்தகைய பெருமையை அடைந்திருக்கிறார்களோ, அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்.