உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி, தங்கத்தில் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதனால் இந்தியாவில் அதிக அளவு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிகரான அளவில் கடந்த ஜூன் மாதத்திலும் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது. அதன்படி, கடந்த மே மாதத்தில் 600 கோடி டாலர் மதிப்புக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மீதான சுங்க வரி 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்த்தப்பட்டதால் கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்து வந்தது.

அதன்படி இந்த மாதத்தின் (ஜூலை) முதல் நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 அதிரடியாக அதிகரித்தது. ஒரு சவரன் ஆபரண தங்கம், 38,280 ரூபாய்க்கு விற்பனையானது. ஒருகிராம் 4,785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து விலை அதிகரித்து வந்தது.

கடந்த திங்கட்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து ரூ.4,810க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு144 ரூபாய் உயர்ந்து 38,480 ரூபாய்க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து நேற்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்து 38,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து ரூ.4,805க்கு விற்பனையானது.

இந்நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு 520 ரூபாய் அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 38 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் சரிவடைந்து 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 65 ரூபாய் குறைந்து ரூ. 4,740க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

இதேபோல வெள்ளியின் விலையும் குறைந்து கிராம் 62.5 ரூபாக்கும், கிலோ 62,500 ரூபாக்கும் விற்பனையாகிறது.