புதுடெல்லி: மே 2022-ல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டைவிட 44% அதிகரித்து ரூ.1,40,885 கோடி வசூலாகியுள்ளது. தமிழ்நாட்டில் மே 2021-ல் ரூ.5,592 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் மே 2022–ல் 41% அதிகரித்து ரூ.7,910 கோடி வசூலாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி மொத்த வருவாய் மே 2022-ல் ரூ.1,40,885 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.25,036 கோடியும், மாநில ஜிஎஸ்டி-யாக ரூ.32,001 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யாக ரூ.73,345 கோடியும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ.37,469 கோடி உட்பட) செஸ் வரியாக 10,502 கோடியும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ.931 கோடி உட்பட) வசூலாகியுள்ளது.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யிலிருந்து மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ.27,924 கோடியும், மாநில ஜிஎஸ்டி-க்கு ரூ.23,123 கோடியையும் அரசு வழங்கியுள்ளது. இதற்கு பிறகு மே மாதத்தில் மத்திய அரசுக்கான மொத்த வருவாயாக ரூ.52,960 கோடியும், மாநில ஜிஎஸ்டி-க்கு ரூ.55,124 கோடியும் கிடைத்துள்ளது. இது தவிர ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 31.05.2022 நிலவரப்படி ரூ.86,912 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

மே 2022-ல் ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்ததைவிட 44% அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நான்காவது முறையாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் மே 2021-ல் ரூ.5,592 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் மே 2022–ல் 41% அதிகரித்து ரூ.7,910 கோடி வசூலாகியுள்ளது. புதுச்சேரியில், மே 2021-ல் 123 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், மே 2022-ல் 47% அதிகரித்து ரூ.181 கோடி வசூலாகியுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

அதேசமயம் கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவு ஜிஎஸ்டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் மே மாதத்தில் 16 சதவீதம் குறைந்துள்ளது.