மயிலாடுதுறை- காரைக்குடி இடையே இயக்கப்படும் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பயண நேரம் 4 மணி நேரமாக குறைந்துள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் காரணமாக அவ்வழித்தடத்தில் கடந்த 7 ஆண்டுகளாக ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தன. பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு 2019 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி ரயில் இயக்கப்பட்டது. பின்னர் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட ரயில் சேவை, மீண்டும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதியில் இருந்து இயக்கப்படுகிறது.

இந்த ரயில் மொத்தம் 20 நிலையங்களில் நின்று செல்லும். திருவாரூர்- காரைக்குடி இடையே 73 ரயில்வே கிராஸிங்குகளில் கேட் கீப்பர்கள் இல்லாததால் ரயில் இயக்கம் தாமதமானது. இதனால் திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு பயண நேரம் 6 மணி நேரமாக இருந்தது. இந்நிலையில் 73 ரயில்வே கிராஸிங்குகளிலும் முன்னாள் படை வீரர்களை கேட் கீப்பர்களாக ரயில்வே நிர்வாகம் நியமித்தது. இதையடுத்து ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் 4 மணி நேரமாக குறைந்ததால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.