அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்றும், அரசு ஒரு ரூபாய் செலவு செய்தால், அந்த ஒரு ரூபாய் சிந்தாமல், சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கான மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கான 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், இந்தக் கூட்டத்தினுடைய நோக்கத்தைப் பற்றியும், இதில் எப்படி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதைப் பற்றியும், ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துக் கூறினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய தொடக்க உரையில், “மாவட்ட ஆட்சித்தலைவர்கள், தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்கள் குறித்து, கள நிலவரத்தை விரிவாக நீங்கள் இங்கே எடுத்துரைக்கலாம். இந்த அரசினுடைய திட்டங்களின் பயன் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வது குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துக்களில் அதை இணைத்து தெரிவிக்கலாம்.

எங்களுக்கும், உங்களுக்கும் அதாவது, எங்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கும், உங்களைப் போன்ற அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆகவே, ஒரு ரூபாய் செலவு செய்தால், அந்த ஒரு ரூபாய் சிந்தாமல், சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்திட முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்றப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் இருந்தால், நீங்கள் இங்கே கூறலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பொருட்கள் கிடைக்கிறது. அது மஞ்சளாக இருக்கலாம், இயற்கை

வளங்கள் அதிகமாக இருக்கலாம். அவற்றை எப்படி மார்க்கெட் செய்வது, அதிலிருந்து எப்படி அரசிற்கு வருமானத்தைப் பெருக்குவது என்பது குறித்தும், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில், பெருந்தொழில் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய திட்டங்கள் என்னென்ன என்பது குறித்த கருத்துக்களையெல்லாம் நீங்கள் இங்கே தெரிவிக்கலாம் எனக் கேட்டு, நேர்மையான நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, உங்களுடைய ஆலோசனைகளை சுதந்திரமாக நீங்கள் கூறலாம் என்று கேட்டு, அந்த வகையில் உங்களுடைய கருத்துக்களைக் கேட்பதற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்