வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள் நடத்தி வந்த கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம், ஆலம் கோல்டு மற்றும் டைமன்ட் நிறுவனம் ஆகியவற்றின் வங்கி கணக்கில் இருந்த ₹110 கோடியே 93 லட்சத்துக்கு ₹20 ஆயிரத்து 174 நிரந்தர டெபாசிட் தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கம் செய்தது.
 இந்த பணத்தை பறிமுதல் செய்ய அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய 110 கோடியே 93 லட்சத்துக்கு 20 ஆயிரத்து 174 ரூபாய் வங்கி நிரந்தர டெபாசிட்டை இடைக்காலமாக பறிமுதல் செய்ய அனுமதியளித்து  உத்தரவிட்டது.   

இந்த வழக்கு நீதிபதி ஓம்பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கே.சி.பி. இன்ப்ரா உள்ளிட்ட  நிறுவனங்கள் பதில் மனு தாக்கல் செய்தன.
லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், லஞ்ச ஒழிப்புத்துறையின்  மனு ஏற்கனவே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. எனவே, தற்போதைய நிலையில் மனுவை நிராகரிக்க மனுதாரர்கள் கோர முடியாது. இருந்தபோதிலும் கூடுதல் மனு தாக்கல் செய்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார் நீதிபதி.
 பின்னர் விசாரணையை வருகிற ஏப்ரல் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.  அதேவேளையில்,  நிறுவனங்களின் டெபாசிட் தொகையை பறிமுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்றும் உத்தரவிட்டார்.